திங்கள், 30 நவம்பர், 2015

திருநாதர்குன்று

விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக, செஞ்சிப் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத் தடயங்கள் ஏராளமாக உள்ளன.

திருநாதர்குன்று அமைந்துள்ளப் பகுதி சிறுகடம்பூர் என்று அழைக்கப்படுகிறது. ஆனாலும் செஞ்சி நகரின் ஒரு பகுதியாகும்.


இந்தக் குன்றின் மீதுள்ள பிரம்மாண்டப் பாறையில் சமண முனிவர்களான 24 தீர்த்தங்கரர்களும் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர்.

இச்சிற்பத் தொகுதியின் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு.

தமிழகத்தில் கழுகுமலைக்கு அடுத்து இங்குதான் 24 தீர்த்தங்கரர்களும் ஒரே சிற்பத் தொகுதியில் காணப்படுகின்றனர்.

இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டு ஒன்றில், “ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆ சிரிகரு நிசீதிகை” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது சந்திரநந்தி எனும் சமண ஆசிரியர் ஐம்பத்தேழு நாள் உண்ணா நோன்பிருந்து இங்கு உயிர்நீத்துள்ளார். இக்கல்வெட்டில்தான் முதன் முதலாக உயிர் எழுத்தில் ஒன்றான “ஐ“ இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மற்றொரு கல்வெட்டு இளையபத்ரர் என்பவர் 30நாள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்ததைத் தெரிவிக்கிறது.



இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-6ஆம் நூற்றாண்டுகளாகும்.

இந்த இடம் தொல்லியல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறது.



வரலாற்றுக் குறிப்புகளைச் சொல்லும் தகவல் பலகைகள், வரலாற்றை நன்கு அறிந்தவர்களால் இதற்குமேல் யாருக்கும் வேண்டாம் என்று அகற்றப்பட்டுவிட்டன!

ஜம்பைக் கல்வெட்டு

ஜம்பை.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவலூரில் இருந்து 21ஆவது கி.மீ. அமைந்துள்ள சிற்றூர்.

வாலையூர், நித்த வினோதபுரம், இராசேந்திரபுரம் எனும் பெயர்கள் இந்த ஊருக்கு வழங்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன, இங்குள்ள கல்வெட்டுகள்.

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் “சண்பை“ என்றழைக்கப்பட்ட இவ்வூர், தற்போது வடமொழிக் கலப்புடன் “ஜம்பை“ எனப்படுகிறது.

இத்தலத்து இறைவன் ஜம்புநாதர். இக்கோயில் முதலாம் பராந்தகன் காலத்தில் எடுக்கப்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த ஊரில்தான் அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதியமான் நெடுமான் அஞ்சி குறித்து, குறிப்பாக, மலையமான் திருமுடிக்காரியை அவன் வென்றதை சங்க இலக்கியங்கள் புகழ்ந்துரைக்கின்றன.

நிற்க.

மௌரியப் பேரரசன் அசோகனதுக் கல்வெட்டுகள் சோழர், பாண்டியர், கேரள புத்ரர் மற்றும் ஸத்ய புத்ரர் குறித்துப் பேசுகின்றன. இதில் குறிப்பிடப்படும் “ஸத்ய புத்ரர்“ என்போர் யார்? எனும் வினா, வரலாற்றுலகில் நீண்டநாள் நிலவிவந்தது.

இதற்கு விடை கண்டறிந்தவர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கல்வெட்டியல் பயிற்சி நிறுவன மாணவராக இருந்த செல்வராஜ்.

1981 அக்டோபரில் ஜம்பைக் குன்றில், தாசிமடம் என்றழைக்கப்படும் இயற்கையான குகைத் தளத்தில் இந்தக் கல்வெட்டினை அவர் கண்டறிந்தார்.

சமண முனிவர்களுக்குக் கற்படுக்கைகள் செய்வித்துக் கொடுத்த அரசனை அந்தக் கல்வெட்டு இப்படிக் குறிப்பிடுகிறது “ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி.


ஜம்பைக் கல்வெட்டினை முதன்முதல் பார்வையிட்டு ஆய்வுசெய்த டாக்டர்.இரா. நாகசாமி, “இந்தக் கல்வெட்டின்முன் நின்றபோது, அதியமான் நெடுமான் அஞ்சியே தம்முன் உயிர்பெற்று நிற்பது போன்ற பிரமை தமக்கு ஏற்பட்டதாகத்“ தெரிவிக்கிறார்.

“ஜம்பைக் கல்வெட்டின் காலம் கி.மு.270 - கி.மு.230 என்பார் ஆய்வாளர் நடன.காசிநாதன்.

“மாங்குளம், புகழூர், எடக்கல், ஜம்பை முதலிய இடங்களில் கிடைத்த தமிழ்-பிராமி கல்வெட்டுகள் தமிழக வரலாற்றை சங்க இலக்கியங்களுடன் ஒப்புநோக்கி ஒரு நிலையான கால எல்லைக்குள் வைக்க அடிப்படையாயினஎன்கிறார் ஆய்வாளர் கா.இராஜன்.

ஜம்பைக் கல்வெட்டின் மூலம் அசோகன் குறிப்பிடும் “ஸத்ய புத்ரர்கள், அதியமான்கள் தாம் எனத் திட்டவட்டமாகத் தெளிவாகிவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்பைக் கல்வெட்டு,

அண்மைக் காலத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது.

மகிழ்ச்சி.


முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதனைக் கண்டுபிடித்த திரு.செல்வராஜ் குறித்தும் ஆய்வுலகம் பேச வேண்டும்...!

உடையாநத்தம் “தாய்த் தெய்வம்”

தாய்வழிச் சமூகமே உலகின் தொன்மை வாய்ந்த மனிதக் குழுக்கள் என்கின்றனர் மானிடவியல் ஆய்வாளர்கள்.

தமிழர்களும் இத்தகைய தாய்வழிச் சமூகத்தினர்தான்.

இதற்கான ஆதாரத்தைக் காண்பதற்கு உடையாநத்தம் கிராமத்துக்குப்போக வேண்டும்.

இங்குள்ள காப்புக் காட்டிற்குள்தான் அந்த வரலாற்றுத் தடயம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

பிரம்மாண்டமாக, கைகளை விரித்தாற் காணப்படும் இந்தத் தட்டையான ஒற்றைக் கல் பாறையை அந்தப் பகுதி மக்கள் விசிறிப் பாறை என்றழைக்கின்றனர்.



“இது தாய்த் தெய்வ வழிபாட்டின் அடையாளம் என்பார், ஆய்வாளர் டாக்டர் இரா.நாகசாமி. 

“இது கீழ்வாலைப் பாறை ஓவியத்தில் இடம்பெற்றுள்ள தாய்த் தெய்வத்தின் மூல உருவமாகவே தோன்றுகிறதுஎன்கிறார் பேராசிரியர் த.பழமலய். 

“இச்சிற்பம் கல்லில் செதுக்கிய கடவுள் அன்னையின் உருவம்என்பது ஆய்வாளர் கே.வி.இராமனின் கருத்து.

உடையாநத்தம் விசிறிப் பாறையின் வயது 5000 ஆகும்.

இப்பாறைக்கு அருகில் பழைமைவாய்ந்த கல்திட்டைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இந்த இடம் பழமையின் பெருமை பேசினாலும், தொல்லியல் துறையின் அரவணைப்பு ஏனோ இன்னமும் கிடைக்கவில்லை!

விசிறிப் பாறைக்குக் கிழக்கில், மலையடிவாரத்தில் ஆத்திலியம்மன் கோயில் அமைந்துள்ளது.


இரண்டு பெரிய மரங்களுக்கு நடுவே, மூன்று பட்டையானக் கற்கள் நடப்பட்டு, மேலே பலகைக் கல்லால் மூடப்பட்டுள்ளது. இதற்குள்தான் ஆத்திலியம்மன் வாசம் செய்கிறாள்.

அந்த இடத்தைச் சுற்றிலும் சிறியதும் பெரியதுமான சூலங்கள். மஞ்சள் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் துணிகள் சூலங்கள் மீது சுற்றப்பட்டுள்ளன.

மண்ணால் ஆன குதிரை மற்றும் மனித உருவப் பொம்மைகளும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் செலுத்தியக் காணிக்கைகள் இவை.

உடையாநத்தம் காப்புக் காட்டிற்குள் செல்வதற்கும் விசிறிப்பாறை மற்றும் ஆத்திலி அம்மன் கோயிலைப் பார்ப்பதற்கும், உள்ளூரைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலும் துணையும் தேவை.

உடையா நத்தம்:

விழுப்புரம்-திருவண்ணாமலைச் சாலையில் கீழ்வாலைக்கு முன்னதாக 3 கி.மீ. வடக்கில் செல்ல வேண்டும்.   

கீழ்வாலைப் பாறை ஓவியங்கள்

“தென்னிந்தியாவின் கற்கால மனிதன் காடுகளில் வசிக்கவில்லை. மலையை ஒட்டிய பீட பூமிகளில்தான் வசித்தான்என்பார் ஆய்வாளர் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, ஆலம்பாடி, உடையாநத்தம், பெருமுக்கல் உள்ளிட்ட இடங்கள் தொல் பழங்கால மனிதர்கள் வாழ்ந்திருந்த இடங்களாகும்.

அவற்றிற்கான அடையாளங்கள் இன்றும் இப்பகுதிகளில் நிலைத்துள்ளன.

குறிப்பாகக் கீழ்வாலை பற்றி இங்குப் பேசலாம்.

விழுப்புரம் – திருவண்ணாமலைச் சாலையில் 28ஆவது கி.மீ.இல் அமைந்துள்ளது இந்த ஊர்.

நெடுஞ்சாலையில் இருந்து தெற்கே மண் சாலையில் இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டும்.

சிறிதும் பெரிதுமானக் குன்றுகள் காணப்படுகின்றன. இதில், “இரத்தக் குடைக்கல் பாறைகுறிப்பிடத்தகுந்ததாகும். 

இந்தப் பாறையில்தான் விலங்கு, பறவை முகம் கொண்ட மனிதர்கள், கோடுகள் புள்ளிகளைக் கொண்ட ஏராளமானக் குறியீடுகள் என சிவப்பு நிறத்திலான ஓவியங்கள் நிறைந்துள்ளன. (அதனால்தான் இரத்தக் குடைக்கல் என்கின்றனேரோ?)


மங்கிய நிலையில் காணப்படும் இவ்வோவியங்கள் மீது தண்ணீர் தெளித்தால் பளிச்செனத் தெரியும்.

“கீழ்வாலை ஓவியங்கள் கி.மு.500இல் இருந்து 1000 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம்என அறிஞர் பி.எல்.சாமி  தெரிவித்துள்ளார். 

“கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் பல சொற்களின் தொகுப்பு. ஒவ்வொரு ஓவியமும் ஒரு சொல்லின் அறிகுறிஎன்பார் ஆய்வாளர் கா.இராஜன். 

“தொல் பழங்கால ஓவியம் பற்றிய வரை படத்தில் தமிழகத்திற்கும் ஒரு சிறப்பான இடத்தை அளிக்கும் வகையில் கீழ்வாலை ஓவியங்கள் அமைந்திருப்பதாகத்தெரிவித்துள்ளார் ஆய்வாளர் கே.வி.இராமன்.
  
உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களுள் ஒன்று சிந்துசமவெளி நாகரிகம். “தென்னிந்தியா வில் இருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிகம்என ஹீராஸ் பாதிரியாரும், “சிந்துவெளி நாகரிக எச்சங்கள் திராவிட நாகரிகம் சார்ந்தவைஎன சர் ஜான் மார்ஷலும் தெரிவித்துள்ளனர்.

திராவிட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் எனும் கருத்தினை ஹெச்.ஆர். ஹால், பி.டி.சீனிவாச ஐயங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், கா.சுப்ரமணியப் பிள்ளை, மலைமலையடிகளார், சேவியர் தனிநாயகம் அடிகளார், ஞா.தேநேயப்பாவாணர் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்தாகும்.

மேலும் சிந்துவெளியில் காணப்படும் முத்திரை எழுத்துக்கள் தொல் தமிழே என்பதும் அறிஞர் பெருமக்களின் கருத்தாகவும் இருக்கிறது.


இந்நிலையில், 

தமிழகப் பாறை ஓவியங்கள் குறித்து மிகவும் ஆய்வுசெய்த ஆய்வாளர் இராசு.பவுன் துரை சொல்வார் “சிந்துசமவெளியில் கிடைக்கப்பெற்ற வரி வடிவங்களைப் போன்று கீழ்வாலையிலும் அமைந்துள்ளன.” 

சிந்துவெளி எழுத்துக்கள் குமரிமுனையில் இருந்து சிந்துவெளிவரை பரவியிருந்தது என்பதற்கு கீழ்வாலைப் பாறைஓவியமும் சிந்துவெளி எழுத்தும் அருமையான சான்றுகளாக விளங்குவதாகபேராசிரியர் இரா.மதிவாணன் தெரிவித்துள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.


80களின் இறுதியில் கீழ்வாலை ஓவியங்களைக் கண்டறிந்தவரும், இதுகுறித்து மிகவும் ஆய்வு செய்தவருமான அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, “17 கோடுகள் உள்ள சூரியன், வட்டத்தில் கூட்டல் குறி, சாய்வான நிலையில் கூட்டல் குறி, சூலம், நட்சத்திரக் குறி, தொங்கும் உடுக்கை, வேர் உள்ள மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான குறியீடுகள் கீழ்வாலை ஓவியங்களில் காணப்படுவதாகவும், 50க்கும் மேற்பட்டக் குறியீடுகள் சிந்துவெளி முத்திரைக் குறியீடுகளோடு ஒத்திருப்பதாகவும்தெரிவித்துள்ளார்.


தொல்பழங்கால மனிதர்களின் கருத்துப் பரிமாற்றம், வேட்டையாடுதல், சடங்கு ஆகியவற்றை விளக்குவதாக கீழ்வாலை ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

இதில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது, படகில் மூன்றுபேர் செல்வது போன்ற காட்சியாகும். “இது பழந்தமிழரின் கடல்சார் அறிவினைக் காட்டவல்லதுஎன்பார் முனைவர் சு.தில்லைவனம்.

உலகின் புகழ்ப்பெற்ற நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். தொல் குடிமக்கள் வாழ்ந்தப் பகுதிகளில் நாமும் வசித்து வருகிறோம் என்றெல்லாம் நாம் பெருமை பாராட்டிக் கொள்ளலாம்.

இதற்கு வரலாற்று ஆதாரமாக இருக்கும் கீழ்வாலைப் பாறை ஓவியங்களும், சுற்றுப்புறங்களும் இன்று எப்படி இருக்கின்றன?

ஓவியங்கள் அடங்கியப் பாறைகளைச் சென்றடைய சரியான வழித்தடம் கிடையாது. வழிகாட்டுநரும் இல்லை. தனியாரின் வயல்வரப்புகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஓவியங்கள்மீது கிறுக்கல் பிடித்தச்சிலர் கிறுக்கத் தொடங்கிவிட்டனர். 

பழங்கால மக்களின் வாழ்விடமாக இருந்தது, தற்போது குடிமக்களின் கூடரமாகியுள்ளது. மதுபாட்டில்களின் சிதறல்கள் உங்கள் கால்களைப் பதம்பார்க்கலாம். ஜாக்கிரதை!

மக்கள் பார்வையில் படாதவரை 3ஆயிரம் ஆண்டுகளுக்கும்மேல் பாதுகாப்பாக இருந்தப் பாறை ஓவியங்கள், மக்கள் பாதம்பட்ட 50ஆண்டுகளில் மெல்ல அழிவைச் சந்தித்து வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்!


சுற்றிலும் மலைக்குன்றுகள் தொடர்ந்து உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

ஓவியங்கள் உள்ள குன்றுகளை “உடைப்பாளர்களிமிருந்துக் காப்பாற்றியது அரசின் சாதனைதான். ஆனால் தொடர்ந்து இவை காப்பாற்றவும் பாதுகாக்கப்படவும் வேண்டுமே?   

திருவக்கரை கல் மரங்கள்

சங்கராபரணி ஆறு என்றழைக்கப்படும் வராக நதி. செஞ்சிப் பகுதியில் உற்பத்தியாகி, புதுவை அருகே கடலில் கலக்கிறது.
இதற்கு செஞ்சியாறு, அரியாங்குப்பத்தாறு போன்ற பெயர்களும் வழிநெடுகிலும் வழங்கப்படுகிறது.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்திப் பெரிது என்பார்கள். இந்த ஆறு ஓடும் தூரம் மற்ற ஆறுகளைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும், இதன் புகழ் உலகளாவியது.
அரியாங்குப்பத்தாறு கரையில் அமைந்துள்ள அரிக்கமேட்டின் சிறப்புகளை நாம் அறிவோம்.
இதே போல் சுத்துக்கேணி, பாகூர், முத்தரையர் பாளையம், கோரிமேடு உள்ளிட்டப் பகுதிகளில் தொல் பழங்காலச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருவக்கரை...

தமிழகத்தின் எல்லையில் புதுவையை ஒட்டிய கிராமம். 
நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் போற்றிப் பாடியுள்ளத் தலம்.

கோச்செங்கட் சோழனால் செங்கல்லால் கட்டப்பட்ட சந்திர மௌலீசுவரர்க் கோயில், முதலாம் இராஜராஜனின் 16வது ஆட்சியாண்டில் (கி.பி.1000-1001) கற்றளியாக மாற்றப்பட்டது.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சிவாலயங்களில்தான் விஷ்ணுவும் இடம் பெற்றிருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கது திருவக்கரை.
இத்தலத்தில் வீற்றிருக்கும் வக்கிர காளியையும், குண்டலினி முனிவரின் ஜீவ சமாதியையும் உலகறியும். தலச்சிறப்புகளைப் பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.
இப்போது இம்மண்ணின் மாண்பை பார்ப்போம்!
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவக்கரை, முருக்கேரி பகுதிகள் கனிம வளம் நிறைந்தவை.
இக்கிராமங்களில் 40 மீ அகலமுள்ள கருப்புக் கல் தொடர்கள் 16 மைல் தூரத்திற்கு பூமியில் நீண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.
1881ஆம் ஆண்டு சோனராட் எனும் ஐரோப்பிய விஞ்ஞானி திருவக்கரைக்கு வந்தார்.
வராக நதிக்கரையோரம் இருந்த மேடும் பள்ளமுமான அந்தப் பகுதியை ஆய்வு செய்த அவர், இயற்கையில் அற்புதமான கல் மரங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த நாள் முதல் திருவக்கரை உலக வரை படத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தது.


இங்குள்ள கல் மரத்துண்டுகளின் வயது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை கடலூர் மணற் கல் தொகுப்பைச் சேர்ந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இயற்கையின் சீற்றத்தில் புதையுண்ட மரங்கள், படிமங்கள் மீண்டும் நிலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களால் புதைவிலிருந்து மேலே வந்திருக்கலாம்.

‘இக்காலத்தில் உள்ள புன்னைக் குடும்பம், கட்டாஞ்சிக் குடும்பம், முதிரைக் குடும்பம், ஆமணக்குக் குடும்பம் ஆகியவற்றை சேர்ந்த இனங்களும் இந்தக் கல்லுரு தாவரங்களில் இருந்திருக்கக் கூடும். புளிய மரத்தையொத்த மரமும் காணப்படுவதாக” இங்குள்ள அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.
திருவக்கரை கல் மரங்கள் சென்னை அருங்காட்சியகம் மற்றும் சாத்தனூர் கல் மரப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அறிவியல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை பாதுகாத்திட 1957ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியப் புவியியல் துறையின் சார்பில் தேசியப் பூங்கா (கல்மரங்கள்) தொடங்கப்பட்டது.

திருவக்கரைக் கோயிலுக்கு வரும் பலரும் கல்மரப் பூங்காவைப் பார்க்க பிரியப்படுகின்றனர். ஆனால் எங்கிருக்கிறது? எந்தப் பக்கம் செல்வது? வழிகாட்டும் பலகைகள் எதுவும் கிடையாது.
ஊருக்கு வழியைக் கண்டுபிடித்துச் செல்வது போல நாமும் கண்ணில் தென்படுபவர்களிடம் எல்லாம் வழி கேட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.
பல நாடுகளில் செயற்கைக் கல் மரங்களைக்கூட கண்ணாடி பேழையில் வைத்து (வைரம் போல்) பாதுகாக்கிறார்களாம்.
ஆனால் இங்கு இயற்கையிலேயே கிடைக்கக் கூடிய கல் மரங்களை பாதுகாக்க வேண்டிய நினைப்பு நமக்கு இல்லை.
பல வீடுகளில் துணி துவைக்கும் கல்லாக இவை பயன்படுத்தப்பட்டு வந்ததை, திருவக்கரையைச் சுற்றி வரும் போது நான் பார்த்தேன்.
இங்கிருக்கும் “அரிய கல் மரத்துண்டுகளை யாரும் எடுத்துச் செல்லக் கூடாது” என்று எச்சரிக்கிறது கல் மரப் பூங்காவின் அறிவிப்புப் பலகை.
ஆனால் சாலையின் ஓரங்களிலும் இக் கல்மரங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதை நாம் பார்க்கலாம்.
ஏற்கனவே கல் குவாரிகள் எனும் பெயரில் ஏராளமான கல் மரங்கள் வெட்டியெடுத்துச் செல்லப்பட்டுவிட்டன.
இருக்கும் கல் மரங்களையாவது காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும், உள்ளூரில் இருப்பவர்களுக்கும், இதை உலகறியச் செய்யும் மத்திய அரசின் புவியியல் துறைக்கும் இருக்கிறது.
ஆனால், நீயா நானா எனும் பட்டிமண்டபம்தான் திருவக்கரையில் நடந்து வருகிறது!
திருவக்கரை:
விழுப்புரத்திலிருந்து முண்டியம்பாக்கம் வழியாக புதுவை சாலையில் 15கி.மீ. பயணித்தால், திருமங்கலம் கிராமத்தை அடையலாம். அங்கிருந்து வடக்கில் 7வது கி.மீ.இல் இருக்கிறது. திருமங்கலத்தில் இருந்து ஆட்டோக்களும் செல்கின்றன. திண்டிவனத்தில் இருந்தும், புதுவையில் இருந்தும் திருவக்கரைக்குச் செல்லலாம்.