திங்கள், 30 நவம்பர், 2015

விழுப்புரம் மாவட்டம் உதயம்


30.09.1993

- தாலுகாவின் தலைநகராக இருந்து வந்த விழுப்புரம், மாவட்டத்தின் தலைநகரமாக ஆன நாள்.

இன்றைய தினத்தில்தான் கடலூரில் நடந்த விழாவில், விழுப்புரத்தைத் தலைமை யிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை முதல்வர் செல்வி.ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி

தமிழ்க்குடியின் தொன்மை குறித்து வியந்துரைக்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.

இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையிலான இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவக்கரை கல்மரங்கள், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் உள்ளிட்டத் தொல்பழங்காலச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்ட, பழமையும் பெருமையும் மிக்கது விழுப்புரம் மாவட்டம்.

அருவா நாடு, மலாடு, திருமுனைப்பாடி நாடு, நடுநாடு, சேதிநாடு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இம்மாவட்டம், தொண்டை மண்டலத்தின் ஒருபகுதியாகவும் விளங்கியது.

சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற ஊர்கள் இடம்பெற்றதும், சுந்தரமூர்த்தி நாயனார், மெய்கண்ட தேவர், கவிகாளமேகம், கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் ஆகியோர் அவதரித்ததும், பாரியின் மகள்களை அடைக்கப்படுத்திவிட்டு கபிலர் கனல்புகுந்ததும், கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி ஆட்சி புரிந்ததும் இந்த மண்ணில்தான்.

பல்லவர்களின் குடைவரைக் கோயில்கள், ஓவியங்கள், சமணக்குகைத்தளங்கள்– நிசீதிகைக் கல்வெட்டுகள், சோழர்களின் கலைச்சின்னங்கள் இந்த மாவட்டம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.

திவ்ய பிரபந்தத்தின் விளைநிலமும், அட்ட வீரட்டங்களில் ஒன்றும் ஒருங்கே அமைந்திருப்பது இங்குதான்.

பல்லவர், சோழர், பாண்டியர், காடவர், சம்புவராயர், முகலாயர், விஜயநகரர், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர் மற்றும் பிரிட்டிஷ்- பிரெஞ்சு ஆகிய அரசுகளின் ஆளுகைகளில் இருந்துள்ளது இந்த மண்.

செஞ்சிக் கோட்டை, சேந்தமங்கலம் கோட்டை, தியாகதுருகம் கோட்டை, வழுதாவூர் கோட்டை, பெருமுக்கல் கோட்டை, விழுப்புரம் கோட்டை என கோட்டை கொத்தளங்கள் இங்கு நிறைந்திருந்தன.

இம்மாவட்டத்தில் (சொரையப்பட்டு) கண்டெடுக்கப்பட்ட ரோமானியக் காசுகள், உலகின் மற்ற பகுதிகளுடன் இம்மண்ணுக்கு இருந்த பரந்துபட்டத் தொடர்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

1801இல் கேப்டன் கிரஹம் தலைமையில் தென்னார்க்காடு மாவட்டம் உருவானது. இதில் இடம்பெற்ற 20 தாலுகாக்களில் விழுப்புரமும் ஒன்று.

சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்குப்பின் வளர்ச்சியின் வேர்கள் விழுப்புரத்தில் முளைவிடத் தொடங்கின.

1975இல் அரசுப் போக்குவரத்துக் கழகமும், 1982இல் தென்னார்க்காடு மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியமும், 1988இல் காவல் மாவட்டமும் விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்பட்டன.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது விழுப்புரம் வருவாய் மாவட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் இது செயல்வடிவம் பெற்றது 1993இல்.

கடலூரை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாக்க் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கலாம் என முடிவெடுத்த அரசு, இந்த மாவட்டத்திற்கு “விழுப்புரம் வள்ளலார் எனப் பெயர் சூட்டியது. இதன் தனி அதிகாரியாக இரமேஷ் குமார் கன்னா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், வள்ளலார் வாழ்ந்து மறைந்தது கடலூரில். எனவே அம்மாவட்டத்திற்கு அவரதுப் பெயர் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது.


இதனைத் தொடர்ந்து 30.09.1993 அன்று நடந்த விழாவில், கடலூர் மாவட்டத்திற்கு தென்னார்க்காடு வள்ளலார் மாவட்டம் எனப் பெயர் சூட்டிய முதல்வர் ஜெயலலிதா, “விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்எனும் புதிய மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார். (உண்மையில், படையாட்சியாரும் கடலூர் மாவட்டத்துக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது)
 
இதற்கிடையே 1997இல் தமிழக அரசின் பெயர் மாற்ற நடவடிக்கையினைத் தொடர்ந்து, இதன் தலைநகரான “விழுப்புரம்என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

வடக்கில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும், தெற்கில் கடலூர் மாவட்டமும், மேற்கில் சேலம்,தர்மபுரி மாவட்டங்களும், கிழக்கில் வங்காள விரிகுடாவும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.



விழுப்புரம் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 7,222.03 ச.கி.மீ. இதன் மக்கள் தொகை 34,58,873. இதில் ஆண்கள் 17,40,809பேர்களும், பெண்கள் 17,18,054 பேர்களுமாவார் கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வருவாய் நிர்வாக கிராமங்களின் எண்ணிக்கை 1490.

விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி என 3 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், 1099 ஊராட்சிகள், 3 நாடாளுமன்ற மற்றும் 11 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

தென்பெண்ணை, கெடிலம், மலட்டாறு, மணிமுத்தாறு, கோமுகி, சங்கராபரணி ஆகிய ஆறுகள் இம்மாவட்டத்தின் நீர்நிலைகளாகும். வீடூர், கோமுகி, திருக்கோவலூர், மணிமுக்தா, எல்லீஸ் அணைக்கட்டுகள் இங்குள்ளன. 

கல்வராயன் மலை, செஞ்சிக் கோட்டை, வீடூர் அணை, ஆரோவில் ஆகியவை முக்கியச் சுற்றுலாத் தலங்களாகும்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலை, கடலூர்-சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, புதுவை-கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகியவை இம்மாவட்டத்தின் ஊடாகச் செல்கின்றன.

தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளைக் கடந்தும், விழுப்புரம் மாவட்டம் இன்னும் பின்தங்கிய மாவட்டமாகவே இருக்கிறது.  

பரப்பளவில் பெரிதாக இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பதும் நீண்டநாள் கோரிக்கையாகும்...!

 

2 கருத்துகள்: